Saturday, 1 March 2025

வெள்ளக் குதிரை.

வெள்ளக்குதிரை!((குழந்தைப்பாடல்)

வெள்ளக் குதிரை ஒன்று,
துள்ளி வருகிறது இன்று.
செல்லக் குழந்தைகளே நன்று!
அள்ளி மகிழுவீர் கண்டு.
வெள்ளை மனதே வெள்ளைக்
 குதிரை.

பள்ளம் மேடு பார்க்கிறது.
துள்ளித் துள்ளிப் பாய்கிறது!
கள்ளம் மனது இல்லாதே!
கனைத்து முன்னே விரைகிறது.
நினைவில் ஆணைக்குப் பணிகிறது.

கொள்ளைச் சாப்பிடும் குதிரையிது,
துள்ளுது பூமி அதிருது.
வெள்ளைப் புழுதி கிளப்புது.
தானே தரையில் புரளுது!
சோம்பல் நீக்கி நிற்கிறது.

நின்றே நிலையில் ஓய்கிறது.
ஒன்றே உறுதி கொள்கிறது.
பல்லைக் காட்டிக் கனைக்கிறது.
அன்பில் அப்படிச் சிரிக்கிறது!
பண்பில் விலங்கும் தெறிக்கிறது.

தீரன் அவன்தான் சின்னமலை,
வீரமங்கை  நாச்சியாரும்
தேடிக் கண்ட நற்குதிரை,!
போரில் சீறிய மேற்குதிரை.
நேருக்கு நேரே பாய்குதிரை.

சூரன் வீரன் கட்டபொம்மன்
வீரர் மருதவர் வேந்தர்களின்
போர்களில் பாய்ந்த மற்குதிரை!
ஆறுந் தாண்டும் போர்க்குதிரை.
சேறுக்கும் அஞ்சா செருக் குதிரை.

காட்டிக் கொடுத்தத் துரோகிகளை,
துரத்தி உதைத்தத் தென்குதிரை.!
மரணம் எண்ணா உரக் குதிரை.
சரணம் அடையா தமிழ்க் குதிரை.
தருணம் பாரா செயற் குதிரை.

குதிரை உணர்த்தும் பாடங்கள்,
பதித்து மனதில் ஓடுங்கள்.
வளரும் நல்லக் குழந்தைகளே!
வாலிபம் கடந்தும் பயின்றிடுவீர்!
கல்விக்கு என்ன கரை உண்டு!

பார்க்கப் பார்க்க ஊக்கம் எழும்.
தாத்தாப் பாட்டன் நினைவு வரும்.
வீணர் பகைவரை வென்ற கதை,
தானே தூண்டும் தன்னுணர்வை.
பார்வை அதிலே பலம் தெரியும்.

வீணே பகைமை வேண்டாமே.
தானே ஓய்ந்தும் தளராதே!
ஏனோ தானோ எண்ணாதே!
கடமை மறந்தும் ஓயாதே!
உடமை நினைந்தால் மானமே!

விதியை எண்ணி நோவோரை,
விலக்கி வெறுத்துத் தள்ளாதீர்!
கதியை ஊட்டி ஆளாக்கி,
கணக்கில் சேர்ப்பீர் சீராக்கி.
மதியை மதித்துக் கூராக்கி.

சமூக ஆர்வம் அவசரம்.
சுமூக சமூகம் அவசியம்.
வெள்ளைக் குதிரை மனதிலே,
வேகம் வளரனும் செயலிலே!
உள்ளம் ஊக்கம் இலக்காக.

கொ.பெ.பிச்சையா.














No comments:

Post a Comment